தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக சுமார் 20 நாள்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
சனிக்கிழமை 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை 23,975 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டிறியப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 8,987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு குறைந்தாலும், சென்னை உட்பட 18 மாவட்டங்களில் பாதிப்பு முந்தைய நாளை காட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு விகிதம் 30 சதவீதமாக உள்ளது. அதாவது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மூவரில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று வண்டலூர் பூங்காவில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, உயிரியல் பூங்கா ஜனவரி 31 ஆம் தேதி வரை மூடப்பட்டது.
அதே போல், சனிக்கிழமை 11 பேர் மட்டும் உயிரிழந்த நிலையில், நேற்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 10 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். திடீரென இறப்பு எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக, செங்கல்பட்டில் 2,701 பேரும், கோவையில் 1,866 பேரும், திருவள்ளூரில் 1,273 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் தான் 21 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, ஒரே நாளில் 194 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1.42 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7,811 இல் இருந்து 8,018 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆக்ஸிஜன் இல்லாத படுக்கைகள் 35% நிரம்பியுள்ளதால், மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அத்திப்பட்டில் 2,000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மீண்டும் திறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.