கார்குண்டு வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியிடம் சைபர் கிரைம் போலீஸார் ஆறு மணி நேரம் விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.
கோவையில் கடந்த அக்டோபர் 21-ந் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பத்தில், தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஜமாத்தினர் முன்வரவில்லை என கூறப்பட்டது.
இதற்கு கிஷோர் கே. சாமி ரீ-ட்விட்டில் குண்டு ஒழுங்காக வைக்காத நபரை எப்படி ஜமாத்கள் அடக்கம் செய்வார்கள் என என பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த ட்விட்டர் பதிவு தொடர்பாக கிஷோர் கே சாமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமி மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து தொடர்ந்து நேற்று சென்னையில் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிஷோர் கே. சாமியிடம் ஆறு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த உத்திரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற்பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்திலுள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர். கிஷோர் கே.சாமியின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil