தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில, நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 258 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுகிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. ஆனால் மது பிரியர்கள் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற நிலையில் நேற்றே மது வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர் இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 258 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.58.37 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.48.32 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.47.79 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகளில் முக்கவசம், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்ததால், தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் இருந்ததாக சமூக ஆர்வலர்கள் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil