தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் முதல்நாளான இன்று ( ஜன.16 ) 2,783 பேருக்கு செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அதேபோன்று, தேசிய அளவில் முதல் நாளில் ( ஜன.16 ) 1,91,181 பயனாளிகள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் வரும் நாட்களில் இந்தப் பணி முழுவீச்சில் நடைபெறும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 775 பேர் குணமடைந்து உள்ளனர். 610 பேருக்கு இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.78% குணமடைந்துள்ளனர்.
முன்னதாக, கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா முழுவதும் வழங்கும் நடவடிக்கையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து பேசிய பிரதமர், "முதல் சுற்றிலேயே மூன்று கோடி மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் இது உலகத்தின் குறைந்தது 100 நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும் என்றும் கூறினார். இரண்டாம் சுற்றில் 30 கோடி பேர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் வயது முதிர்ந்தோர் மற்றும் இணை நோய் தன்மை உடையவர்களுக்கு இந்த சுற்றின்போது தடுப்பு மருந்து வழங்கப்படும்" என்றும் கூறினார்.