தலித் மக்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்தால் குலதெய்வம் கோபித்துக் கொள்ளும் என பேசிய பெண்ணின் வைரல் வீடியோ வெளியானதை தொடர்ந்து அவர் மீது ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர் வேலுச்சாமி. இவர் தனது மனைவி லட்சுமியுடன் ஒட்டன்சத்திரம் அருகே நாய்க்கனூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இதனிடையே கடந்த வாரம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலுச்சாமிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு கேட்டு சென்றுள்ளார். அப்போது வேலுச்சாமியின் மனைவி லட்சுமி அவர்கள் வீடு வாடகைக்கு கேட்டு வந்துள்ள நபரிடம் நீங்கள் எந்த ஜாதி மதம் என கேட்டு உள்ளார்.
மேலும் தலித் ஜாதியினராக இருந்தால் எங்களால் வீடு தர முடியாது காரணம் எங்கள் குலதெய்வம் கோபித்துக் கொள்ளும் என்று லட்சுமி அவர்கள் பேசியதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தலித் சமூகம் குறித்து இவ்வாறு பேசிய லட்சுமியின் வீடியோ பதிவு தற்போது வைரலாகி பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் லட்சுமி மீது மதுரை வீரன் என்பவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் என் கீழ் வழக்கு பதிவு செய்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவாசரத்தில் தொடர்புடைய லட்சுமி தற்போது தலைமறைவாக உள்ள நிலையில். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil