List of Earthquakes in Chennai in Past: இன்று(பிப்.12) காலை சத்தம்போடாமல் சென்னையை அசைத்து பார்த்திருக்கிறது நிலநடுக்கம். ஆம்! அதன் வீரியம் மிகக் குறைவாக இருந்ததால், மக்கள், காலை வழக்கம் போல் கண் விழித்தனர். வீரியம் அதிகமாக இருந்திருந்தால்...? நினைத்துப் பார்க்கவே பதறுகிறது!.
இதனை நிலநடுக்கம் என்று சொல்வதை விட, நில அதிர்வு என்று சொல்லலாம். லேசான நில அதிர்வு. இதுகுறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், "இன்று காலை 7:02 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேர் பகுதிகளில் பதிவாகியுள்ளது. இதற்காக எந்த சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த சில தகவல்களை இங்கே பார்ப்போம்,
நில அதிர்வால் இந்தியாவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்கள் குறித்தான வரைபடத்தை BIS வெளியிட்டுள்ளது. அதன்படி, இதற்கு முன்பாக கணித்ததை விட, தமிழ்நாட்டில் அதிக பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 2வது மண்டலத்தில் இருந்த சென்னை, 3வது மண்டலத்திற்கு மாறுகிறது. கேரளாவை ஒட்டியுள்ள மாநிலத்தின் மேற்கு பகுதிகளும் மூன்றாவது மண்டலத்தில் வருகிறது. ஆந்திர பிரதேச மாநில எல்லை மற்றும் கர்நாடக மாநில எல்லை ஆகியவையும் இதில் வருகிறது. இதைத் தவிர மற்ற மாநிலத்தின் மற்ற பகுதிகள் அனைத்தும் 2வது மண்டலத்தில் வருகிறது.
2000-மாவது ஆண்டுக்குப் பிறகு, இன்றோடு சேர்த்து ஐந்து முறை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
26 செப்டம்பர் 2001 - வங்கக் கடலில் ஏற்பட்ட மிதமான நில அதிர்வால், சென்னைக்கு அருகே உள்ள புதுச்சேரியில் நில நடுக்கம் ஏற்பட்டது. 26 செப்டம்பர் 2001 அன்று, இரவு 8:26 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டது. ஆனால், இந்த நில அதிர்வால் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், புதுச்சேரியிலும், தமிழகத்தின் சில கடலோர பகுதிகளிலும் லேசான பொருட்சேதம் ஏற்பட்டது.
26 டிசம்பர் 2004 - சுமத்ரா - அந்தமான் நிலநடுக்கம்.
இதைப்பற்றி நாம் ஒன்றுமே சொல்லத் தேவையில்லை. சுமத்ரா தீவினில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி உருவாகி, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த வடு இன்றளவும் மறக்க முடியாத ஒரு சோக நிகழ்வே.
7 ஜூன் 2008 - 7 ஜூன், 2008 அன்று இரவு 23:35 மணிக்கு தமிழகத்தின் பாலாறு பள்ளத்தாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
12 ஆகஸ்ட் 2011 - அரியலூர் மாவட்டத்தில் 12 ஆகஸ்ட் 2011 அன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11:36 மணிக்கு இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் சிறிதளவு சேதாரம் ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.