நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி : எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா அலியா தர்காவில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Advertisment
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா அலியா தர்காவில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மகன் உசேன் கூறுகையில்,
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக வர வேண்டியும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும். அப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி 72 தர்காக்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட உள்ளது.
ஆன்மிக பயணமாக நான் 39 வது மாவட்டமாக கோவைக்கு வந்து பிரார்த்தனை செய்தேன். 38 மாவட்டங்களை விட கோவையில் தொண்டர்கள் சமத்துவமாக வந்து பிரார்த்தனை செய்துள்ளனர். மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் 50 ஆண்டுகளில் மக்களுக்கு அதிக திட்டம் தந்தது அதிமுக தான். மற்ற எந்த கட்சியும் இல்லை. உலமாக்கள் ஓய்வூதிய திட்டம் எம்.ஜி.ஆர். தந்தார்.
இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள் என சிலர் சொல்லலாம். ஆனால் இஸ்லாமியர் பாதுகாப்பான இயக்கம் அதிமுக தான். பல திட்டங்களை அள்ளி தந்தவர் எஸ்.பி.வேலுமணி. ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்களா? எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. சாலைகள் குளங்களை போல இருக்கிறது. அதிமுக தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கேடயம் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும். அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார் எனத் தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”