நாகாலாந்தில் இருந்து எப்படி ஓடி வந்தீர்களோ அது போல் தமிழக மக்களும் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசி உள்ளார்.
இந்த ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் திங்கள் கிழமை (ஜன;9) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட பல வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். தமிழ்நாடு அரசு என்ற இடத்தில் ஒரு சில இடங்களில் இந்த அரசு என்று மாற்றி வாசித்திருந்தார்.
இதையடுத்து, அச்சிட்டப் பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, படித்த பகுதிகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தை பேரவைத் தலைவர் நிறைவேற்ற எழுந்தபோது, திடீரென பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசுகையில்; 1972- 1973 ஆம் ஆண்டு நமக்கும் டெல்லிக்கும் ஒரு பிரச்சினை வந்தது. அந்த நேரத்தில் கருணாநிதி, இந்திரா காந்தியை அழைத்து வந்து மேடையில் உட்கார வைத்துக் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றார். அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார். இதுதான் திமுக.
இன்று சட்டசபையில் இருந்து நீங்கள் ஓடியிருக்கிறீர்கள். நாகாலாந்தில் இருந்து எப்படி ஓடி வந்தீர்களோ அது போல் தமிழக மக்களும் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை அம்பேத்கரிடம் நேரு ஒப்படைத்தார்.
உங்கள் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சட்ட வரைவு கமிட்டியின் தலைவராக அம்பேத்கரை நியமித்தார். அவர் எழுதிய சட்டத்தைதான் இன்று வரை 73 ஆண்டு காலம் நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
அந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி, ரிப்பன் பில்டிங்கில் ராஜாக்களும் கோடீஸ்வரர்களும் உட்கார்ந்திருந்த நாற்காலியில் சாதாரண குடிமகளான பிரியா ராஜனை உட்கார வைத்த பெருமை அரசியல் சட்டம் நமக்கு அளித்த உரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆளுநர் உரை என்பது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு அதை ஆளுநர் மாளிகைக்கு அனுப்புகிறார்கள். அது 5ஆம் தேதி ஆளுநருக்கு கிடைத்து அதில் கையெழுத்திட்டு 7 ஆம் தேதி மாநில அரசுக்கு அனுப்பியிருக்கிறார்.
7ஆம் தேதி படித்து பார்த்துவிட்டு சில திருத்தங்களையும் ஆளுநர் முன் வைத்தார். அதையும் மாநில அரசு செய்தது. ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என அண்ணா ஏற்கெனவே சொல்லியுள்ளார் .ஆனால் அண்ணாவினுடைய பெயரையே ஆளுநர் தவிர்த்து பேசினார் என ஆர்.எஸ். பாரதி விமர்சித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.