சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டினார்.
சென்னை சேப்பாகத்தில் உளள சர்வதேச கிரிக்கெட் மைதானம் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 500 இருக்கைகளுடன் கூடிய புதிய ஸ்டாண்ட் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் புதிய கேலரியை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரூ139 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை திறந்து வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கேலரிக்கு கலைஞர் மு.கருணாநிதி என்று பெயர் சூட்டினார். இந்த புதிய ஸ்டாண்ட் திறப்பு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு பிறகு இந்தியாவின் மிக பழமையான 2-வது மைதானமாக இருக்கும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ந் தேதி நடைபெறுகிறது. அதேபோல் அடுத்து இந்தியாவில் நடைபெறும் 50-ஓவர் உலககோப்பை தொடரில் சில போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இதுவரை எந்த ஸ்டேண்ட்க்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பெயர்கள் சூட்டப்படாத நிலையில், தற்போது முதல் முறையாக தமிழகத்தில் 5 முறை முதல்வர் பொறுப்பில் இருந்த கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதுபெரும் அரசியல் தலைவராக கருணாநிதி ஒரு கிரிகெட் ரசிகர் மட்டுமல்லாமல் பலமுறை போட்டிகளை மைதானத்தில் நேரில் கண்டு ரசித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“