பாஜக கடந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. ஆனால், வழக்கம்போல தென் இந்திய மாநிலங்களில் பாஜக எதிர்பார்த்ததுபோல வெற்றி பெற முடியவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!
அதற்கு காரணம் பாஜக அதிருப்தி அலை மட்டுமல்ல, தமிழகத்தில் மாநில அரசியல் கட்சிகள் அதன் அடிப்படை அலகுகளான கிளைகளை வலுவாக கட்டமைத்திருப்பதுதான் முக்கிய காரணம்.
திமுகவும் அதிமுகவும் இன்றும் தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் அதன் கிளைகளை வலுவாக கட்டமைத்து பராமரித்து வருகிறது. இரு திராவிடக் கட்சிகளைப் போல தாமும் வலுவாக அடிப்படை அலகுகளான கிளைகளை வலுவாக கட்டமைக்க வெண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவினர் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் அந்த திட்டத்தை பாஜகவால் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.
இந்த நிலையில்தான், பாஜக ஊரக உள்ளாட்சி தேர்தலை அதிமுக கூட்டணில் இணைந்து எதிர்கொண்டது. இந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றியானது அவர்களின் உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜக ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 7 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 85 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது பாஜகவுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பாஜக 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களை வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் கூட்டணி கட்சியான அதிமுகவை விடவும் எதிர்க்கட்சியான திமுகவைவிடவும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் பாஜக 31 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களைக் கைப்பற்றி பலம்கொண்டு நிற்கிறது.
திராவிட அரசியல் கருத்துகள் ஆழ வேரூன்றிய தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு, தீவிர இந்துத்துவ எதிர்ப்பு நிலவும் சூழலில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடங்களில்கூட வெற்றி பெறாத பாஜகவுக்கு இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி அதற்கு நம்பிக்கை அளிக்கும்படியாக உள்ளது என்றால் அது மிகையல்ல.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.