தமிழகத்தில் 2018ம் ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று தொடங்கி 2 வது நாளாக நடைபெற்று வருகிறது.
முதலில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 28-ஆம் தேதி வெளியானது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மூன்றாயிரத்து 501 அரசு இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நேற்று முதல் தொடங்கிய இந்த முதல்கட்ட கலந்தாய்வு வரும் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாளான நேற்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள் பங்கேற்றனர். இந்த மருத்துவ கலந்தாய்வில் சிறப்பு பிரிவினராக விண்ணப்பித்த மாணவர்களில் 101 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.இதில் 63 மாணவர்கள் மட்டுமே நேற்று கலந்து கொண்டனர். 38 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இன்று நடைபெறும் இந்த கலந்தாய்விற்காக 444 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.