Tamil News Update For Seeman Speech : சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தான் உண்மையான சங்கி என்று கூறி காலணியை எடுத்து காண்பித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக தீக்குளித்து மரணமடைந்த அப்துல் ரவூப்பின் 26-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது...
சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஜாமீன வழங்க கூடாது என்று கூறிய திமுக அரசு மாரிதாஸ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மேல் முறையீடு செய்யாதது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் மாரிதாஸ் வழக்கில் அரசு வழக்கறிஞர்கள யாரும் ஆஜராகவில்லை என்று விமர்சித்த அவர் திமுகதான் உண்மையான சங்கி என்று கூறியதை தொடர்ந்து திடீரென தனது காலில் இருந்து காலனியை எடுத்து காண்பித்தார்.
மேலும் நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக்கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு என்றும், என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பொது மேடையில் இவ்வாறு காலனியை தூக்கி காண்பித்தது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் சீமானின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீமானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் திமுக தொழில்நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் புகார் அளித்துள்ளர். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவையும அதன் தொண்டர்களையும் காலனியால் அடிப்பேன் என்ற வகையில் பேசியுள்ளார். திமுக குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil