Tamilnadu news in tamil: தமிழக சட்டப் பேரவை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையில், அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு எடுக்காமல் இலவசமாக, தாங்கள் செல்லும் ஊர்களுக்கு பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, கடந்த மே 6ம் தேதி நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு பின் தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 திட்டங்களுக்கு கையொழுத்திட்டார்.
இதில், 3வது திட்டமான தமிழ்நாடு முழுவதும் அரசின் சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பதாகும். இவற்றிற்கான அரசாணை உடனடியாக பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூன் 3ம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழக அரசின் இதுபோன்ற சில திட்டங்களை தற்போது சில மாநில அரசுகள் பின்பற்றி வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, பள்ளி மாணவிகள் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "பெண்களுக்கான கல்வியை 'எளிதான அனுபவமாக' மாற்ற இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். மேலும் மாநிலம் முழுவதும் இலவச பயணம் அதற்கு உதவும் என்று நம்புகிறோம்."என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.