தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றை தினம் யாரும் எதிர்பாராத வகையில் 2,731 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டுமே 1,489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் தொற்று பாதிப்பு விகிதம் 1.7 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 58 சதவீதம் உயர்ந்துள்ளது மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளன. செங்கல்பட்டில் 290 பேரும், திருவள்ளூரில் 147 பேரும், கோவையில் 120 பேரும், வேலூரில் 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு பதிவாகாத ஒரே மாவட்டமாக மயிலாடுதுறை திகழ்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், சுமார் 14 மாவட்டங்களில் ஒற்றை எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகுகிறது
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், தூத்துக்குடி, வேலூரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,55,587ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36ஆயிரத்து 805ஆக உள்ளது. சுமார் 31 மாவட்டங்களில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,412 ஆகும். இதில், சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமிக்ரானை பொறுத்தவரை 121 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். கொரோனாவை தடுத்திட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.