Tamilnadu Trichy SI Murder Case Update : திருச்சி நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலையயத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (56). நாகை மாவட்டம் சந்தைவெளி கிராமாத்தை சேர்ந்த இவர் கடந்த 3 ஆண்டுகளாக இதே காவல்நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பூமிநாதன், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சில மர்மநபர்கள் ஆடுகளை ஏற்றிச்செல்வதை பார்த்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவர், அவர்களை பின்தொடர்ந்து சென்றபோது, இவரை பார்த்துவிட்ட மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் மர்மநபர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒரு குழு தப்பிஓடிவிட்ட நிலையில், மற்றொரு குழு காவல் அதிகாரி பூமிநாதனை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் எச்சரிக்கையான அவர் சக காவல் அதிகாரிகளுககு தகவல் அளித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பூமிநாதன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் 19 வயதான மணிகண்டன், 10 மற்றும் 17 வயதுடைய இரு பள்ளி சிறுவர்கள் என இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காவல்துறையின் ரகசிய பாதுகாப்பு இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் சிவகங்கை மாவட்ட எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil