தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் இன்று காலை திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள இல்லத்தில் ஆசிரியர் இளமாறன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பெரம்பூர் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளமாறன் மறைவையொட்டி, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆசிரியர் பி.கே.இளமாறன். தமிழ் ஆசிரியரான இவர் கொடுங்கையூர் அரசுப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவரான பி.கே. இளமாறன் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம், அறிக்கைகள் வெளியிடுவது உள்ளிட்டவற்றை முன்னெடுத்து வந்தார். அரசுப் பள்ளிகள் குறித்தும், கல்வியின் இன்றைய சூழல் பற்றியும் தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு குறித்து, இளமாறன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். அத்துடன் நின்றுவிடாமல், 2018ஆம் ஆண்டு அரசின் சிறப்பு அனுமதி பெற்று, தன்னுடைய சொந்த செலவில் தன்னுடைய பள்ளியில் படிக்கும், 120 மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி வந்தார். பின்னர் இந்த திட்டம், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விரிவுபடுத்தபட்டது.
சமீபத்தில் கூட, சனிக்கிழமை பள்ளிகள் இங்குவது மாணவர்களின் முழுகவனத்தை சிதறடிக்கும், சனிக்கிழமை பள்ளிகள் இயங்குவது முழுமையாகப் பயன்தராது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலையில் இளமாறனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இளமாறனின் திடீர் உயரிழப்பு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.