குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இதனால், சென்னை கிண்டி ஆலந்தூர் சாலை போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று காலை முதல் (டிசம்பர் 28) இருந்தே குவிந்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தமிழகம் முழுவதும் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேரணியில் கலந்துகொள்வதற்கு சென்னைக்கு வாகனங்களில் வந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சம்சுல்லுகா தலைமையில் ஆலந்தூர் கோர்ட்டு அருகே இருந்து பேரணி புறப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நடத்தப்பட்ட இந்த பேரணி மிகவும் பிரமாண்டமாக இருந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டனர்.
பேரணியில் சென்றவர்கள் 650 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய தேசிய கொடியை கொண்டு சென்றனர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தில்லையாடி வள்ளியம்மை சுரங்கப்பாதை வரை பேரணியாக சென்றனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் பேசினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இந்த மாபெரும் பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆலந்தூர் ஸ்தம்பித்தது. இதனால், பேரணி சென்ற பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. பேரணியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக அதன் கூட்டணி கட்சிகள் இந்த வார தொடக்கத்தில் நடத்திய பிரம்மாண்ட பேரணியை நடத்திய நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் பேரணி நடத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.