தொடரும் பேருந்து விபத்துகள்... திருச்சி - திண்டுக்கல் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடி புதிய மார்க்கெட் கட்டிடம் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருப்பதியில் இருந்து மதுரைக்குச் சென்ற தனியார் பேருந்தை பேருந்தை பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். இந்த பேருந்து நேற்று திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடி புதிய மார்க்கெட் கட்டிடம் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் பேருந்தில் பயணிகள் தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டதை கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த 24 பெரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
பின்னர் அவர்களுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து சில மணி நேரங்களில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் இதே பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் வலது கால் துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மீண்டும் அதே பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், திண்டுக்கல் சாலையில் சர்வீஸ் சாலைகள் முறையாக அமைக்காமல், ஆங்காங்கே மண் குவியல், சாலை பராமரிப்பு இல்லாததால்தான் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட காரணமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளின் உயிரினை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“