வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பேட்டி :
மழை நிலவரம் குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் பேசினார். அதில், “தமிழக பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது.
அதிகப்பட்சமாக சிதம்பரம், விழுப்புரம் 9 செ.மீ.மழை பெய்துள்ளது. திருச்சுழி 5 செ.மீ, மயிலாடுதுறை, ஏற்காடு, சென்னை மாதவரம், உளுந்தூர்ப்பேட்டை, சீர்காழி, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மிதமான மழை பெய்யக்கூடும்.” என்று கூறினார்.