'குடி'மகன்களுக்கு குஷியான செய்தியாக தமிழக அரசு டாஸ்மாக் பார்களை நாளை முதல் திறக்க அனுமதி அளித்து அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, மார்ச் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானைக் கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும், டாஸ்மார்க் கடைகளில் உள்ள பார்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை நாளை முதல் திறக்க தமிழக அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. பார்களில் 50 சதவீத இருக்கை வசதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50 சதவீத இருக்கை வசதியை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார்களுக்கு வருபவர்களுக்கு கட்டாயம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். பார்களின் நுழைவாயிலில் ஹேண்ட் சானிடைசர்களை வைக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"