சென்னையில் இன்னும் ஒரு வாரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சென்னையில் உள்ள மது பிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொது முடக்கத்தால், அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை தவிர அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால், சில இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையும் கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்றது. சட்ட விரோதமாக மது விற்பனை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தனர்.
கொரோனா பொது முடக்கத்தை மத்திய அரசு ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. மத்திய அரசு 3வது கட்ட பொது முடக்க நீட்டிப்பு அறிவிப்பின்போதே மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, தமிழக அரசு கடந்த மே 7-8 தேதிகளில் சென்னை உள்ளிட்ட நோய் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் மது விற்பனை தொடங்கப்பட்டது.
சமூக இடைவெளி போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று டாஸ்மாக் மது விற்பனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உச்ச நீதிமன்ற அனுமதி பெற்று, மே 16-ம் தேதி முதல் டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்ததும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியுமான ஊரப்பாக்கம் பகுதியிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், குறைவான நேரம் மட்டும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்னும் ஒரு வாரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானதால் சென்னையில் உள்ள மதுப்பிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.