மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டு வருவதாகவும், இந்த கோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தனது ஆளுமையால் தனி இடத்தை பிடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 1960 முதல் 80 வரை தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அவர், அதன்பிறகு அரசியலில் கால்பதித்து அதிலும் வெற்றிக்கோடி நாட்டினார். 1988 எம்ஜிஆர் இறந்த பிறகு தீவிர அரசியலில் இறங்கிய அவர் தமிழக மக்களால் 5 முறை முதல்வராக தேர்தந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2011 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இவர் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார். ஆனால், 2016 ம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உயிரிழந்தார்.
அவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் ஜெயல்லிதாவின் மறைவு செய்தி கேட்டு தமிழகம் முழுவதும் 4700 தொண்டர்கள் மரணமடைந்தாக தகவல் வெளியானது. இந்நிலையில், மறைந்த முன்னாள் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், கட்டப்பட்டு வரும் இந்த கோவில் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கனை சந்தித்த அவர், இந்த கோவில் குறித்து கூறுகையில், ஜெயலலிதாவை தெய்வமாகக் கருதி வணங்குகின்ற அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள், மற்றும், அவர்களின் குடும்பத்தினர், ஜெயலலிதாவை குல தெய்வமாக கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்த கோயிலில் ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலை மற்றும், எம்ஜிஆரின் 6 அடி உயர வெண்கல சிலையும் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அனைவரும் வழிபடும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்த கோயில், விரைவில், திருப்பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"