Advertisment

5 லட்சம் கிராம் கோவில் நகைகள் ஏற்கனவே உருக்கப்பட்டு வங்கியில் இருக்கிறது: தமிழக அரசு

Temple gold melting is not new: Tamil Nadu Government: கோவில் நகைகளை உருக்கி பணமாக்குதல் செயல்முறை 1977 முதல் நடைமுறையில் உள்ளது; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

author-image
WebDesk
New Update
5 லட்சம் கிராம் கோவில் நகைகள் ஏற்கனவே உருக்கப்பட்டு வங்கியில் இருக்கிறது: தமிழக அரசு

பணமாக்குதலுக்காக கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க நகைகளை உருக்கும் நடைமுறை புதியதல்ல, அது 1977 முதல் நடைமுறையில் உள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

இதுவரை, சுமார் 5 லட்சம் கிராம் தங்க நகைகள் உருகப்பட்டு பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன, மேலும் அவை இதுவரை சுமார் ரூ .12 கோடியை வட்டியாக ஈட்டியுள்ளன என்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் கூறினார்.

இந்த முழு செயல்முறையும் உச்ச நீதிமன்றத்தின் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும், இதற்காக மாநிலம் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு செப்டம்பர் 9 ஆம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதிபதி டி.ராஜு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதிபதி கே ரவிச்சந்திரபாபு மற்றும் நீதிபதி ஆர் மாலா ஆகியோர் மூன்று மண்டல குழுக்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் தங்க நகைகளை எடுத்து, ஆராய்ந்து, உருகக்கூடிய நகைகளை ஒதுக்குவார்கள். நீதிபதி வேண்டாம் என நிராகரிக்கும் நகைகள் உருக்கப்படாது. நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களை பிரிக்கும் முழு செயல்முறையும் பதிவு செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 2,000 கிலோ தங்க ஆபரணங்கள் மூட்டைகளில் சேமிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த 10 ஆண்டுகளில் சிறிய நகைகளை பணமாக்கும் நடைமுறை மூலம் உருக்கியிருந்தால், அது கோவிலுக்கு வருவாயை ஈட்டியிருக்கும், மேலும் சொத்துக்களை துறையின் பதிவின் கீழ் கொண்டு வந்திருக்கும், என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

கோவில் தங்க நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்யும் முடிவை எதிர்த்து சென்ன்னை உயர் நீதிமன்றத்தில் எம்.சரவணன் மற்றும் ஏவி.கோபால கிருஷ்ணன் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் இவ்வாறு கூறினார்.

இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ​​நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி அப்துல் குத்தோஸ் ஆகியோரின் விடுமுறைகால பெஞ்ச் முன் மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, மூத்த வழக்கறிஞர்கள் பிரதீப் சஞ்சேதி மற்றும் கோபால் சங்கரநாராயணன் வாதிட்டனர். அப்போது, கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க நகைகளை உருகுவதற்கு ஒரு குறிப்பிட்ட சட்டம் இல்லாததால், எந்த மாநிலமும் அவ்வாறு செய்ய முடியாது. இந்துசமய அறநிலையத்துறை சட்டத்தில் அத்தகைய விதிமுறை இல்லை. எனவே, கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நகைகளை உருகுவதற்கு அரசியலமைப்பு தடை உள்ளது," என்று கோபால் கூறினார்.

மேலும், விதிகளின்படி, கோவிலின் அறங்காவலர் மட்டுமே அத்தகைய முடிவை எடுக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களுக்கு அறங்காவலர் இல்லை, தகுதியான நபர்கள் மட்டுமே இந்த விவகாரங்களை நிர்வகிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, மனுதாரர்களின் வழக்கறிஞரிடம் உருக்குதல் பணியை கண்காணிக்க மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று நீதிபதிகள் கேட்டனர்.

அவர்கள் தெரியாது என பதிலளித்ததால், மனுதாரர்கள் அரசாணையைப் பார்த்தபின் மேற்கொண்ட விவரங்களை சமர்ப்பிப்பதற்காக நீதிமன்றம் விசாரணையை அக்டோபர் 21 க்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மற்றும் திருவேற்காடு மாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு பக்தர்கள் வழங்கும் தங்க ஆபரணங்களை பிரித்தெடுக்கும் செயல்முறை புதன்கிழமை தொடங்கும் என்றும், தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நகைகளை பிரித்தெடுத்தலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment