Thalavanur check dam : விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 25 கோடி செலவில் கடந்த ஆண்டு தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மிகவும் சேதங்களை சந்தித்த அந்த தடுப்பணையை திங்கள் அன்று வெடி வைத்து தகர்த்தனர் அதிகாரிகள்.
Advertisment
இந்த தடுப்பணைக்கான அடிக்கல்லை 10.12.2018 அன்று தலைமைச் செயலகத்தின் காணொளி காட்சி மூலம் நாட்டினார் அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 400 மீட்டர் நீளம் கொண்ட அணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அணை கட்டிமுடிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மதகுகளுக்கு ஆதரவு தரும் வகையில் கட்டப்பட்ட தூண்கள் சேதம் அடைந்து வருகிறது என்று மக்கள் புகார் தெரிவித்தனர்.
நவம்பர் 9ம் தேதி அன்று மழை மற்றும் பெரும் வெள்ளத்தால் மேலும் சேதம் அடைந்தது. சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் கட்டிட இடர்பாடுகளால் தளவானூர் பகுதியில் ஆற்றின் இருபக்கமும் வெள்ள நீர் மண்ணை அரித்துக் கொண்டு சென்றது. மக்களுக்கு மேலும் இது சிரமத்தை தரக்கூடாது என்று யோசித்த அதிகாரிகள் ஞாயிறு அன்று அணையை வெடி கொண்டு தகர்க்க முயன்று தோல்வி அடைந்தனர். பிறகு திங்கள் அன்று முற்றிலுமாக தடுப்பணை தகர்க்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil