தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலையில் இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாய்ந்து அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கல்லணை - திருக்காட்டுப்பள்ளி - தஞ்சாவூர் - மன்னார்குடி இடையே தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கல்லணையில் இருந்து புறப்பட்ட அந்த தனியார் பேருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சாவூர் நோக்கி தஞ்சாவூர் - கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சாலை விரிவாக்கப் பணி நடந்துகொண்டிருந்தது. அதனால், சாலையின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.
அந்த தனியார் பேருந்துஇன்று மதியம் செந்தலை என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது முன்னே சென்ற லாரியை முந்த முயன்றபோது, இடதுபுறமாகச் சென்றதில் நிலை தடுபாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது அங்கே சாலையோரத்தில் நடப்பட்டிருண்த மின் கம்பத்தில் பேருந்து சாய்ந்ததில் மின் கம்பத்தில் இனைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் படிக்கட்டில் உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. இதில், படிக்கட்டுப் பகுதியில் இருந்த நடராஜன், மாரியம்மாள், கல்யாணராமன், கவிதா 4 பேர் உயிரிழந்தனர். முனியம்மாள் என்ற பெண் படுகாயம் அடைந்தார். அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருக்காட்டுப்பள்ளி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"