உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடந்த வலியுறுத்தி பேரவையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த நிலையில், முறையான இடஒதுக்கீடு செய்யவில்லை என திமுக நீதிமன்றத்தை அனுகியது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். தனி அதிகாரிகளின் பதவி காலத்தை டிசம்பர் 30 தேதி வரையில் நீடிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இம்மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அனுமதித்தார்.
அப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பேரவைக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் சென்றோம். நீதி மன்றமும் தேதியை குறிப்பிட்டு இதற்குள் நடத்த வேண்டும் என்று சொன்னது. தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டது. இந்த சூழலில் மீண்டும் உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிகாலத்தை ஆறு மாதகாலம் நீட்டிக்க மசோதாவை தாக்கல் செய்து, நிறைவேற்றும் நிலையில் எங்கள் எதிர்ப்பை தெர்வித்துள்ளோம்.
தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது. சின்னம் இல்லை. கட்சி இரண்டு மூன்றாக உடைந்துள்ளது. இதனால் அரசியல் நோக்கத்தோடு தேர்தலை நடத்தாமல் தள்ளி வைத்துள்ளது. இதை கண்டித்து சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.