ஆர்.கே.நகர் தொகுதி இடை தேர்தலின் போது பணபட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணையை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி சென்னை கிழக்கு இணை ஆணையர் மனோகரனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிந் போது வாக்காளர்களுக்கு பணம் தர பட்டது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸாருக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வைரகண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சத்திய நாராயணன், நீதிபதி சேசஷாயி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வழக்கு டைரியை தாக்கல் செய்தார்.
அதை ஆய்வு செய்த நீதிபதிகள், வருமான வரித் துறை ஆவணங்களில் மூன்று பேரின் பெயர்கள் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. அதனால் அடையாளம் தெரியாதவர்கள் என கூற முடியாது என தெரிவித்தனர்.