நாடே எதிர்பார்க்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக இடம் பெற்றிருந்தது. அதில் திமுகவைச் சேர்ந்த ராசா, தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அமைச்சர் ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட 14 பேர் மீதும் மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இதேபோல அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை தனி நீதிமன்ற நீதிபதி சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வழக்கின் வாதங்கள் எல்லாம் ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு, சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பு வாதங்களை எழுத்துப் பூர்வமாக கொடுக்குமாறு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
இதையடுத்து செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு தேர்தி அறிவிக்கப்படும் என்று நீதிபதி சைனி கூறியிருந்தார். அன்றைய தினம் நீதிபதி சைனி, ’வழக்கின் ஆவணங்கள் ஏராளமாக இருப்பதால், தீர்ப்பு எழுதும் பணி நடந்து வருகிறது. எனவே வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை செப்டம்பர் 25ம் தேதி அறிவிப்பேன். அன்றைய தேதியில் இருந்து இரண்டொரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும்’ என தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டோர் யார்?
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக 2011-ஆம் ஆண்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசா அமைச்சராக இருந்த போது அவரது தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, டி.பி.ரியாலிட்டி நிறுவனர் வினோத் கோயங்கா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவன இயக்குநர்கள் கௌதம் தோஷி, சுரேந்தர் பிப்பாரா, ஹரி நாயர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, குசேகான் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.