தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காற்று தீயில் சிக்கி டிரக்கிங் சென்ற 10 பேர் பலியானதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பலியானவர்கள் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்கும் என்று விபத்தில் பலியான ஹேமலதாவின் உறவினர் மா.காளிதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மா.காளிதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
விபத்தில் பலியான ஹேமலதா எனது மனைவியின் தாய்மாமன் மகள். இரவு 11 மணிக்கு தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்குச் சென்றோம். பல்வேறு பார்மாலிட்டிக் முடித்து உடலை ஒப்படைக்க 3 மணிக்குத்தான் உடலை ஒப்படைத்தனர்.
மா.காளிதாஸ் பதிவு
பிணவறையில் பார்த்த போதே, காட்டுத் தீ விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்குமெனவும், அதை மறைத்து அரசு தரப்பில் 10 பேர் மட்டுமே இறந்ததாகப் பொய்யான தகவல் அளிப்பதாகவும், வனத்துறையினரின் முறையான அனுமதியுடனேயே அவர்கள் மலையேற்றம் புரிந்துள்ளனர் எனவும், வனத்துறையினரின் பதிவேட்டிலுள்ள பெயர் மற்றும் அலைபேசி எண்ணின் அடிப்படையிலேயே பெற்றோருக்கு தகவல் தெரிவிகப்பட்டுள்ளதாகவும் இறந்த இளம் பெண்ணின் சித்தப்பா தெரிவித்தார்.
சாமானியர்களின் இறப்பிலும் கூடத் தன் மதிப்பு கொஞ்சமும் சரிந்துவிடக் கூடாதென்பதில் முனைப்போடு இருக்கும் இந்த அரசின் கீழ் தான், நாம் நமக்கான இறுதிச் சடங்குகளையும் நடத்த வேண்டியதிருக்கிறது என்பது எவ்வளவு பேடித்தனம் என்பதை ஆற்ற முடியாத அரற்றலோடு தான் இந்த பதிவும்.’’
இவ்வாறு மா.காளிதாஸ் பதிவிட்டுள்ளார்.