காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, போலீசார் கெடுபிடிகளையும் மீறி இளைஞர்கள் சிலர் மெரினாவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என சுப்ரிம் கோர்ட் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. 29ம் தேதியோடு சுப்ரிம் கோர்ட் விதித்த கெடு முடிந்த பின்னரும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு கட்சிகளும் கண்டனமும், போராட்டமும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் காலையிலிருந்தே, சென்னை மெரினா கடற்கரையில் ஓன்று திரண்டு போராடுவோம் சமூக வலை தளங்களில் அறிவித்திருந்தார்கள். இதையடுத்து காவல்துறையினர் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினாவுக்கு செல்லும் ஓவ்வொருவரையும் சோதனைக்குப் பின்னரே அனுமதித்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி இளைஞர்கள் ஒன்று கூடி மெரினாவில் போராட்டம் நடத்தினார்கள். யாரும் தலைமை தாங்காமல் தன்னெழுச்சியாக இளைஞர்கள் போராடியது, மிகப்பெரிய விஷயமாக இருந்தது. நான்கு நாட்களுக்கும் மேலாக நடந்த அந்த போராட்டத்துக்கு பின்னர் சட்டசபையில் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அது போன்ற போராட்டம் மெரினாவில் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் தனித்தனியாக வந்த இளைஞர்கள், விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரைக்குள் ஊடுறுவினர். தனித்தனியாக வந்தவர்கள் வரிசையாக நின்று தங்கள் கையில் இருந்த பதாகைகளை எடுத்து விரித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.
இதையறிந்ததும், சாலையில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார், கடற்கரைக்குள் சென்று அவர்களை கைது செயய் முயன்றனர். உடனடியாக அவர்கள் பதாகைகளை மடக்கி வைத்துக் கொண்டு, மக்களோடு மக்களாக நின்று கொண்டார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார் என்பதை கண்டுபிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். ஒவ்வொருவரையாக பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தி வருகிறார்கள்.
போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றாலும், போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றிய போது, ’வேடிக்கை பார்க்கும் பொது ஜனமே வீதிக்கு வந்து போராடு’, ‘போராடுவோம் போராடுவோம்... காவிரிக்காக போராடுவோம்’, ‘விவசாயகளை காப்பாற்ற வேண்டும்’ என்று கோஷம் எழுப்பினர். கடற்கரையில் போராடிய 4 பெண்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, சென்னையில் எங்கெல்லாம் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ள இடங்களை கண்டறிந்து கண்காணிக்கும் படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.