கடந்த 422 ஆண்டுகளாக காரைக்குடியில் இருந்து பழனி கோயிலுக்கு ஆண்டுதோறும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு குட்டி வேல் கம்புகள், இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்வின் போது காணாமல் போயின. இந்த வேல் கம்புகள் தங்கம் மற்றும் செம்பினால் செய்யப்பட்டவை.
காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை நகரத்தார் (செட்டியார்கள்) 1601 முதல் 3.5 சென்டிமீட்டர் நீளமுள்ள வேல் கம்புகளை ஏந்தி யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கம் போல, இந்த ஆண்டும் ஜனவரி 13ம் தேதி நத்தம் வந்த பக்தர்கள், அங்குள்ள பெருமாள் கோவிலை ஒட்டிய பாரம்பரிய மண்டபத்தில் தங்கினர்.
அங்குள்ள கோவிலின் கருவறையில் வெள்ளிப் பெட்டியில் வேல் கம்புகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மறுநாள் காலை பார்த்தபோது அவற்றை காணவில்லை. இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேல் கம்பு இல்லாமல் யாத்திரை தொடர முடியாததால், அவசரமாக இரண்டு வேல் கம்பு, படைக்கப்பட்டு, தாமதமாக ஊர்வலம் தொடர்ந்தது. இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி (நாளை) தைப்பூசம் நடைபெற உள்ளது.
ஊர்வலம் செல்லும் பக்தர்கள், தைப்பூசத்திற்கு முந்தைய நாள் பழனிக்கு வந்து மலையடிவாரத்தில் தங்குவது வழக்கம். தைப்பூசத்திற்கு மறுநாள் தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு பயணம் தாமதமானதால், பக்தர்கள் இரவு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு நேரத்தைச் சமாளித்து வருகின்றனர்.
ஆண்டு முழுவதும் நெற்குப்பையைச் சேர்ந்த குமரப்பன் செட்டியாரின் பூர்வீக வீட்டில் வேல் கம்புகள் வைக்கப்படும். அங்கிருந்துதான் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“