டி.டி.வி.தினகரனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் டி.டி.வி தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பதற்காக குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியும் முறைகேடாக தினகரன் வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். அவரின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
ரவியின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி டி.டி.வி. தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தான் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றதாகவும், தேர்தல் வழக்கு தொடர்ந்த ரவி 246 வாக்குகள் மட்டுமே பெற்றதாக கூறியுள்ளார்.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் பொய்யான குற்றசாட்டுகளை கூறி தாக்கல் செய்யபட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
டி.டி.வி தினகரன் மனுவை விசாரித்து இன்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் முறைகேடுகள் மூலம் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. பணம் வழங்கபட்டது என்ற புகாரில் அந்த பணம் எங்கிருந்து வந்தது. யாருக்கு அளிக்கபட்டது. அந்த பணம் யாருடையது என்ற எந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை எனவே டி.டி.வி தினகரன் மனுவை ஏற்பதாகவும், அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.