கமல்ஹாசன் மறுபடியும் ட்விட்டரில் பட்டையைக் கிளப்புகிறார். ‘அரசாங்கமே திருடுகிறது...குற்றவாளிகள் நாடாளக்கூடாது’ என்பது அவரது லேட்டஸ்ட் ட்வீட்!
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்
— Kamal Haasan (@ikamalhaasan) November 19, 2017
கமல்ஹாசன், சினிமா வாய்ப்புகளை குறைத்துக்கொண்டு தீவிர அரசியல் விமர்சனங்களில் இறங்கியிருக்கிறார். தமிழக அரசையும், அமைச்சர்களையும் வெளிப்படையாக அவர் தாக்கியது பரபரப்பாக பேசப்பட்டது. தனிக்கட்சி தொடங்குவேன், தேர்தலில் போட்டியிடுவோம் என்பது வரை அவர் தெளிவு படுத்தியிருக்கிறார்.
கமல்ஹாசன், ‘மாநில அரசை அட்டாக் செய்யும் அளவுக்கு மத்திய அரசை தாக்குவதில்லை’ என்கிற விமர்சனமும் இருந்து வருகிறது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘என் பக்கத்தில் இருப்பவரை, யார் என்னை அதிகம் பாதிக்கிறாரோ அவரைத்தானே பேச முடியும்’ என்றார் கமல்ஹாசன். இதனால் பாஜக-வுக்கு எதிரானவர்களும் கமல்ஹாசனை ஊக்கப்படுத்த தயங்கினார்கள். எனினும் விவசாயிகளுடன் சந்திப்பு, நற்பணி இயக்கத்தினருடன் சந்திப்பு என அவரது முன் தயாரிப்புப் பணிகள் தொடர்ந்தன.
கமல்ஹாசன், நவம்பர் 7-ல் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அரசியல் விமர்சனங்களை சற்றே குறைத்திருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் மேற்கு வங்கத்தில் நடந்த சினிமா விழாவில் கலந்துகொண்டு மம்தா பானர்ஜியையும் சந்தித்து திரும்பினார்.
அந்த இடைவெளிக்கு பிறகு இன்று(19-ம் தேதி) ட்விட்டரில் மறுபடியும் அரசியல் பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறார் கமல்ஹாசன். அதில், ‘ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்’ என குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
இந்தப் பதிவில் மாநில அரசா, மத்திய அரசா? என கமல்ஹாசன் குறிப்பிடவில்லை. ஆனாலும் மாநில அரசைத்தான் அவர் சொல்வதாக புரிந்து கொள்ளப்படுகிறது. குறிப்பிட்டு எந்தக் குற்றச்சாட்டையும் கூறாமல், பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டாகவே வைத்திருக்கிறார்.
கமல்ஹாசனின் இந்த ட்வீட், அவரது டிவிட்டர் பக்கத்திலேயே ஏக வாத பிரதிவாதங்களை கிளப்பியிருக்கிறது. அவற்றில் ஒன்று, ‘ரஜினியோட 2.0 ஆடியோ லான்ச் ஒளிபரப்பாகும் போதே தெரியும், கமல் காண்டுல ஏதோ பொங்க போராருனு, இதோ பொங்கிட்டாருல’!
நிஜமா ஆண்டவரே!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.