காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் இன்று தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையில் போட்டிகளை நடக்கவிட மாட்டோம் என சில கட்சிகளும், அமைப்புகளும் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழக வாழ்வாதாரங்களையும் - உரிமைகளையும் காத்திடவே எளிய மக்கள் களத்தில் நின்று போர்க்குரல் எழுப்பிவருகிற சூழலில் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வண்ணம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை இரத்து செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், எதிர்ப்புகளை மீறி போட்டியை நடத்தினால் வீரர்களை முற்றுகையிடுவோம் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எச்சரித்துள்ளார். இதேபோல், IPL-ஐ ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க மே 17 இயக்கம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திடும் வண்ணம் இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " காவிரி வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக் கூடாது. சென்னையில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும், அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" என்று அந்த கடிதத்தில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.