ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதன் மூலமாக தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட இன்று (மே 28) அரசாணை வெளியிடப்பட்டது. மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் நசிமுதீன் பெயரில் வெளியான அந்த ஆணையில் ஆலை செயல்பட நிரந்தர தடை விதிப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பித்தது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என தூத்துக்குடி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை அடிப்படையிலும் அந்த ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே 9-4-2018 முதல் அந்த ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியை ரத்து செய்துள்ளது. குடிநீர் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கை அடிப்படையில் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக மக்கள் வைத்த கோரிக்கையை அம்மா அரசு நிறைவேற்றியிருக்கிறது. எனவே தூத்துக்குடி மக்கள் அங்கு அமைதி நிலவ அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களை துணை முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர், ஆதி திராவிடத் துறை அமைச்சர், செய்தித்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களிடம் மக்கள் என்ன கோரிக்கை வைத்தார்களோ அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.’
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.