Advertisment

தமிழக மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மூன்று பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த கோட்டைபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

இதனிடையே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கட்டுபடுத்தும் வகையில், ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா ஒன்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் கடும் பாதிப்பு ஏற்படும் என மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், மசோதாவை திரும்பப் பெற முடியாது என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் யாழ்பானம் கடற்படை முகாமில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்ததும், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இதுவரை 90-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடி வருகின்றனர். தமிழக மீனவர்களின் 150-க்கும் மேற்பட்ட படகுகள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment