TikTok videos : காதலித்து திருமணம் செய்த மனைவியையும் குழந்தைகளையும் 3 ஆண்டுகளாக தவிக்க விட்டு திருநங்கையுடன் வாழ்ந்த வந்த நபர் டிக் டாக் வீடியோ மூலம் போலீசாரிடம் சிக்கினார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரதா. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டுச் சென்ற சுரேஷை கண்டுபிடித்துத் தரக் கோரி விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்திருந்தார் ஜெயப்பிரதார்.
இந்நிலையில், போலீசார் வலைவீசி தேடியும் சுரேஷை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெயப்பிரதா கடந்த 3 ஆண்டுகளாக 2 பெண் பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் டிக் டாக் வலைதளத்தில் காணாமல் போன சுரேஷ் போன்ற நபர் திருநங்கையுடன் ஜோடியாக வீடியோ பதிவிட்டு இருப்பதை ஜெயப்பிரதாவின் உறவினர்கள் பார்த்துவிட்டு, ஜெயப்பிரதாவிடம் வீடியோவைக் காட்டியுள்ளனர்.
அதைக்கண்ட ஜெயப்பிரதா இது தனது கணவர்தான் என உறுதி செய்தார்.பின்னர் இது தொடர்பாக தாலுகா போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, ஜெயப்பிரதாவின் கணவர் சுரேஷ் ஓசூரில் தங்கியிருப்பதகாவும், அந்த வீடியோவில் இருந்த திருநங்கையும் ஓசூரில் அவருடன் வாழ்ந்து வருவதாகவும் போலீசாருக்கு துப்பு கிடைத்திருக்கிறது.
ஓசூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததை தெரிந்துக்கொண்டனர்.அங்கிருந்து சுரேஷை மீட்டு அவரது மனைவி ஜெயப்பிரதாவிடம் சேர்த்து வைத்தனர். இந்த நிகழ்வு விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக டிக் டாக் செயலி மூலம் ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தநிலையில் முதன்முறையாக டிக் டாக் மூலம் ஒரு நல்ல செயல் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.