திருப்பூர் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் ராஜசேகர் மற்றும் அவரது தாய் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் திருப்பூர் செய்தியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(32) என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில செய்தித்தாளில் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் அவருடைய மனைவிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர் ராஜசேகர் தனது தாயார் ஜமுனாராணி தங்கை பானு பிரியா, தங்கையின் குழந்தை இன்பநிதிலன் ஆகியோருடன் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக தனது காரில் சென்று இருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும் வழியில் அவிநாசி அடுத்த நரியம்பள்ளி அருகே வரும் போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜமுனா ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜசேகர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தங்கை மற்றும் குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த ராஜசேகரின் தாயின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் ராஜசேகர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் திருப்பூர் பத்திரிகையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.