டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக ‘கெசட்’டில் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக சட்டப்பேரவை செயலர் பூபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். அதனையேற்று, சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அப்போது புதுவையில் முகாமிட்டிருந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஓரிருவர் மட்டும் நேரில் வந்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தனர். அதை ஏற்காத சபாநாயகர் தனபால், செப்டம்பர் 14-ம் தேதி 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையே டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேர் மீது எந்த நேரமும் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரசியல் சட்டம் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் தனது செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறார். சபாநாயகரின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்எல்ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நிலையில், 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசு கெசட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக சட்டப்பேரவை செயலர் பூபதி கடிதம் அனுப்பியுள்ளார். வழக்கமாக இதுபோன்ற நடவடிக்கைக்கு பின்னர், சில நாட்கள் கழித்தே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ஜெயலலிதா காலமானதையடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதி ஏற்கனவே காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடு முடிந்தும் விட்டது. இது தொடர்பான வழக்கில், அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் இறுதிக் கெடு விடுத்துள்ளது. இதனிடையே, பேரவை செயலரின் இந்த கடிதத்தை ஏற்று, மொத்தம் 19 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்கும் பட்சத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாத சூழல் ஏற்பட்டு விடும். இது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும் வெற்றியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.