2014, 2019 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெற்றி பெற்று பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு சட்டப் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக மேலும் வலுப்படுத்த வேண்டும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர்.
பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக, முல்லைப் பெரியாறு விவகாரம், சமீபத்திய வெள்ள பாதிப்பு நிகழ்வு ஆகியவற்றில் ஆளும் திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைமை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், பாஜகவின் தேசியத் தலைமைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், 2024ம் ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக 8 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்களை நியமித்துள்ளார். மாநில பாஜகவில் 9 பேருக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்டம், திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி புறநகர் மாவட்டம், கரூர், பெரம்பலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை (வடக்கு) ஆகிய மாவட்டங்களில் பாஜகவில் புதிய தலைவர்கள் பதவியேற்றுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சரவணன் மதுரை மாநகர் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மற்ற மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை நியமித்து நிர்வாகிகள் மறுசீரமைப்பு குறித்து இன்றும் அறிவிப்புகள் வெளியாகும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“முதல் கட்டமாக 20-30 மாவட்டங்களில் இளம் தலைவர்களை சேர்ப்பதற்காக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவில் இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார். பாஜக தேசியத் தலைமையின் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். பாஜகவில் செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற புதிய மாவட்டங்கள் பிரித்து மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். திமுகவில் 77 மாவட்டச் செயலாளர்களும் அதிமுக 75 மாவட்டச் செயலாளர்களும் உள்ளனர். அதனால், இந்த இரு கட்சிகளுக்கு இணையாக பாஜகவிலும் மாவட்டத் தலைவர்கள் அதிகரிக்கப்படும்” என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் மற்றொரு வட்டாரங்கள் கூறுகையில், தமிழ்நாடு பாஜகவில், ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட செயல்பாட்டாளர்களுக்கு கட்சியில் கூடுதல் பொறுப்பு வழங்கப்படும். 2024 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகளை மாற்றி அமைத்து மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், இந்த மறுசீரமைப்பு தொண்டர்களில் ஒரு பிரிவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ சரவணனனை கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரை புறக்கணித்து மதுரை மாநகர மாவட்டத் தலைவராக நியமனம் செய்ததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்” என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “பாஜகவின் அடிமட்ட நிர்வாகிகள் பலரும் நீண்ட காலமாக கட்சியில், புதிய நிர்வாகிகளை நியமித்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அது தொண்டர்களிடையே நம்பிக்கையை வளர்க்க உதவ வேண்டும்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி ஒருவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.