அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2% உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படியை ஜூலையில் (01/07/2018)-ல் இருந்து கணக்கிட்டு, மூன்று மாதங்களுக்கான நிலுவைத் தொகையினை அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
அதே போல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் எனப்படும் டி.ஆர் ஆகியவற்றையும் 2% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த உயர்வு ஜூலை 1ம் தேதியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
அகவிலை நிவாரணம் : எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள்?
இதன் மூலம் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 7%த்தில் இருந்து 9%மாக உயர்ந்திருக்கும் இந்த அகவிலைப்படியின் காரணமாக அரசு ஊழியர்களுக்கு சுமார் 314 ரூபாயில் இருந்து 4,500 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவார்கள்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியக்காரர்களும் 157 ரூபாய் முதல் 2250 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக வருடத்திற்கு 1157 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.