சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த திருமணி சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுப் பயணம் சென்றார். அப்போது குல்மார்க் பகுதியில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் அவர்கள் சென்ற வாகனம் சிக்கிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த திருமணி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 3 லட்சம் நிதியுதவி வழங்க அறிவித்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா மஃப்டியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் உரையாடினார்.
தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு மொத்தம் 130 பேர் சென்றுள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவி செய்யுமாறு முதல்வர் பழனிசாமி அம்மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலா சென்ற சுமார் 130 பேர் குறித்த தகவல்களை அறிய அல்லது காஷ்மீரில் உள்ள தமிழர்கள் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தேவையான உதவிகள் அனைத்தும் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
இதற்காக தமிழ்நாடு இல்ல அதிகாரிகளின் தொலைப்பேசி எண் - 011-24193100, 011-24193200 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.