தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய் கிழமை காலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அதைத்தொடர்ந்து, செவ்வாய் கிழமை காலையில் முதலமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த போது கடுமையான வறட்சி நிலவியது எனவும், அப்போது தமிழகத்தில் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டதாகவும் கூறினார். மேலும், இம்முறை சாமி தரிசனம் செய்தபோது தமிழகத்தில் மழை பெய்து, ஏரி, குளங்கள் நிரம்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமைதான் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முதல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தான் அமைச்சராக இருந்தபோதுதான் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.