அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் 3ஆவது முறையாக ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், 2019-2020ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்பாவு எம்.எல்.ஏ. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜய பாஸ்கர் ஆகி்யோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினார்கள்.
வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி பகுதிகளில் 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடந்தது.
இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை (செப்.13) சந்தித்தார்.
அப்போது, “அண்ணா திமுக தூய்மையான இயக்கம். இதில் சட்ட ரீதியாக நின்று, நீதிமன்றத்தில் வழக்காடி அவர் வெற்றி பெறுவார்.
அவ்வாறு வெற்றி பெற்று அவர் அரியணையில் ஏறுவார். அதனை நாம் காணப்போகிறோம்” என்றார்.
மேலும், “கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன” என்றார்.
இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 10, 2021இல் 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, 2021, 18ஆம் தேதி மார்ச் மாதம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil