அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மூன்று கட்ட போராட்டங்களை அந்த அமைப்பினர் நடத்தியுள்ள நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக கடந்த மாதம் 29-ம் தேதியன்று நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும். ஏழாம் தேதியன்று வட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். செப்டம்பர் 8-ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழக அரசு ஜாக்டோ ஜியோ தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் செப்டம்பர் 10-ம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் கூடி தீவிரமான அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பார்கள் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணியளவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையனுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.