சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 1300 டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. இது போல இந்த மாதம் மட்டுமே 1600 கடைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 3000 மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னர் அந்தக் கடைகளை வேறு இடங்களுக்குத் தமிழக அரசு மாற்றியது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை பின்பற்றி, நெடுஞ்சாலைகளில் உள்ள 1300 கடைகள் மற்றும் சென்னையின் பகுதிகளில் 150 கடைகள் என இதுவரை 1600 கடைகள் மூடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கஜானாவை அதிகமாக நிரப்புவது டாஸ்மாக் மதுக் கடைகளில் இருந்து ஈட்டப்படும் வருவாய் தான். எனவே டாஸ்மாக் கடைகளை மூடினால் தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதில், “டாஸ்மாக் கடைகளை மூடினால் தமிழகத்தின் வருவாய் பெரிதாக குறையும், எனவே இதன் மூலம் தமிழகத்திற்கு பொருளாதார ரீதியில் பின்னடைவு ஏற்படும்.” என்று குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக இந்த மனுவின் மூலம் டாஸ்மாக் கடைகளை மூடுவதில் இருந்து தீர்வளிக்கும் வகையில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.