இரட்டை இலை சின்னத்தை சிலர் முடக்க சதி திட்டம் செய்து வருவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி சண்முகம் தெரிவித்தார்.
இன்று, கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சி.வி. சண்முகம் ,"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறோம். இந்த தேர்தல் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதித்திட்டம் செய்து வருகின்றனர். நமக்கு பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் நடந்து கொண்டு வருகிறது. இந்த தேர்தல் நமக்கு வாழ்வா? சாவா? தேர்தல். கட்சிக்குள் சில தலைவர்கள் துரோகம் செய்திருக்கலாம். ஆனால், தொண்டர்கள் எவரும் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள்" என்றும் தெரிவித்தார்.
மேலும், "தற்போதைய அரசியல் சூழலில், யார் யாரோ தன்னை எம்ஜிஆரின் வாரிசுகள் எனசொல்லிக் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எம்ஜிஆர்-ன் வாரிசு என்றால் அது இரட்டை இலை மட்டுமே" என்று தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் குறித்து சி.வி சண்முகம் தெரிவத்த கருத்து அரசியலில் பேசும் பொருளாகி உள்ளது. உண்மையான தகவல்களை தெரிந்து கொண்டு அதிமுக நிர்வாகிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா ? (அ) அதிமுக தொண்டர்களை வேகப்படுத்துவதற்காக என்ற கோணத்தில் அரசியல் பார்வையாளர்கள் யோசித்து வருகின்றனர்.
ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், இங்கே தெரிகிறது
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக தலைமை தான் அறிவிக்கும் என்றும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி என்றும் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ” அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்துள்ளது; எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். அதை மீறி எதுவும் நடக்காது.எடப்பாடி பழனிசாமி அவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டுமே அஇஅதிமுக கூட்டணியில் தொடர முடியும், ” என்றும் தெரிவித்தார்.