தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் (ஈ.வி) முன்னிலைப்படுத்துவதற்காக மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மின்சார (ஈ.வி.) வாகனங்களுக்கான பிரத்தியோக கொள்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த கொள்கை , ரூ .50,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கவும், 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிக்கிறது.
இதன் முதற்கட்டமாக, அடுத்த ஆறு மாதங்களில் 500 க்கும் மேற்பட்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்த விருக்கிறது. இதற்காக , 32 மாநில போக்குவரத்து பஸ் டிப்போக்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பும் உருவாக்கப்பட வுள்ளது. ஏற்கனவே, சோதனை செய்யும் விதமாக சென்னையில் ஒரு மின்சார பேருந்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுடன் பேசிய மாநில போக்குவரத்துத் துறையின் முதன்மை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், "ஈ.வி கொள்கை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமால்,பயனாளர்களின் தேவைகள் மற்றும் மின்சார வாகனகளுக்கான உள்கட்டமைப்பு குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் மின்சார வாகனக்ளுக்கான தொழிற்சாலைகளை விரிவுபடுத்த, தெற்கு மாவட்டங்களில் உள்ள பொதுத் துறை நிலத்தில் இருந்து உற்பத்தி தொடங்குபவர்களுக்கு, நிலத்திற்காக 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நிலத்திற்கான மானியம் 15 சதவீதமாகவும் நியமிக்கப்பட்டுள்ளது . மேலும், அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத சாலை வரி விலக்கு, சிறப்பு மூலதன மானியங்கள், மாநில ஜிஎஸ்டியை திருப்பிக் கொடுத்தல், மற்றும் அதிக வேலைகளை உருவாக்கும் ஈ.வி உற்பத்திக்கு சிறப்பு மானியங்கள் வழங்கும் வகையில் தமிழக அரசின் மின்சார வாகனக் கொள்கை அமைந்துள்ளது