தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் திங்கள்கிழமை (அக்.17) தொடங்கியது. இந்த நிலையில் சபாநாயகர் மு. அப்பாவு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்பட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
நாளை (அக்.18) காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். இதில் 2022-23ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான தகவல்களை நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார். இதன் மீதான விவாதம் பதில் உரை அக்.19ஆம் தேதி நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, அருணா ஜெகதீசன் (தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு) தொடர்பான அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
பின்னர், செய்தியாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் கடிதங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “ஒன்றல்ல இரண்டல்ல நான்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர்” என்றார். அதில் இரண்டு கடிதம் ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து வந்துள்ளது என்றார்.
தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எதனடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார் என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு சபாநாயகர், “அவர் அலுவல் கூட்டத்தில் உறுப்பினராக இருக்கிறார், அதனடிப்படையில் அவர் கலந்துகொண்டார்” எனப் பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“