தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் பெறுபவர்கள் என அனைத்து பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1 மாதத்திற்கும் மேலாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. மக்கள் ஆன்லைன் அல்லது அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்து வருகின்றனர்.
ஆன்லைனில் இணைக்க மின்சாரத்துறை சார்பில் பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டது. சிறப்பு முகாம்களில் அரசு சார்பில் இ.பி - ஆதார் எண் இலவசமாக இணைக்கப்பட்டு வருகிறது. மின் நுகர்வோர் அட்டை, ஆதார் அட்டை கொண்டு சென்று மக்கள் இணைத்து வருகிறார்கள். இந்நிலையில், மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் ஒருமாதம் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. ஜனவரி 31-ம் வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ஜன.31-ம் தேதி வரை நடமாடும் சிறப்பு முகாம் அமைக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 1.60 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
முன்பு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 1 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“